உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிடப்பில் போடப்பட்ட கால்வாய் சீரமைப்பு பணி; ஆற்றில் இருந்து ஏரிக்கு நீர் செல்வதில் சிக்கல்

கிடப்பில் போடப்பட்ட கால்வாய் சீரமைப்பு பணி; ஆற்றில் இருந்து ஏரிக்கு நீர் செல்வதில் சிக்கல்

கள்ளக்குறிச்சி: தென்கீரனுார் ஏரியின் நீர் வரத்து கால்வாய் சீரமைப்பு பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஆற்றில் இருந்து ஏரிக்கு நீர் வரத்து ஏற்படுவதல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பகுதியில் ஏரி நீர் பாசனத்தை நம்பி பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பருவ மழை காலங்களில் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை நிரம்பும் போது ஆறு வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும். அத்தருணத்தில் ஆறுகளில் உள்ள அனைத்து தடுப்பணைகளும் வழிந்தோடும். ஆறுகளில் உள்ள தடுப்பணைகளில் இருந்து சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்படும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் பெரும்பாலான ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டு நிரம்பி வருகிறது. இந்நிலையில், தடுப்பணைகளிலிருந்து ஏரிகளுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான நீர் வரத்து கால்வாய்களில் அதிகளவில் விழல், செடி கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது. இதனால் பருவ மழையின் போது நீர் வரத்து கால்வாய் மூலம் விரைவாக ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் நிலவி வருகிறது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி ஆறு தடுப்பணையில் இருந்து தென்கீரனுார் ஏரிக்கு செல்லக்கூடிய நீர் வரத்து கால்வாய் புதர்கள் மண்டி கிடந்தது. கால்வாய்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நீர் வரத்து கால்வாயில் பாதி துாரம் வரை சீரமைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள கால்வாய் இதுவரை சீரமைக்கப்படாமல் பணிகள் கிடப்பில் போடப் பட்டுள்ளது. மீண்டும் மழை பெய்து ஏரிக்கு நீர் வரத்து ஏற்படும் நிலையில், விரைவாக தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி கிடப்பில் போடப்பட்டுள்ள கால்வாய் சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை