விதிகளின்படி வளர்ச்சி திட்ட பணிகள் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்; அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி: திட்ட விதிமுறைகளின்படி வளர்ச்சி திட்டப் பணிகள் நடப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் பிரசாந்த், அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.சங்கராபுரம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார்.ரங்கப்பனுார் ஊராட்சி அலுலகத்தில், ஊராட்சியில் நடைபெறும் மொத்த பணிகளின் விபரம் குறித்து ஊரக வளர்ச்சித் துறை செயலியில் ஒப்பிட்டு ஆய்வு செய்தார்.பின், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, தானியங்கி நீர் மேலாண்மைக் கருவி, விளையாட்டு மைதானம் ஆகிய பணிகளை பார்வையிட்டார்.அதனைத் தொடர்ந்து, வளர்ச்சித் திட்டப் பணிகளில் உரிய திட்ட விதிமுறைகளின்படி பணிகள் நடப்பதை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்வதுடன் பணிகள் தரமாக இருப்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.பி.டி.ஓ.,க்கள் அய்யப்பன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.