உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகள் கட்டுப்படுத்தப்படுமா: அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

 பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகள் கட்டுப்படுத்தப்படுமா: அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம், முற்றிலும் விவசாயத்தை நம்பி இருக்கும் நிலப்பரப்பு பகுதியாகும். இம்மாவட்டத்தில் திருக்கோவிலுார், சங்கராபுரம், பகண்டை கூட்டு சாலை, தியாகதுருகம் வனசரகங்கள், வனத்தோட்ட கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இத்துடன் வனத்துறையிடம் இருக்கும் இடத்தையும் சேர்த்து மொத்தம் 7,000 ஹெக்டர் பரப்பளவில் காடுகள் உள்ளன.விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வாழும் மாவட்ட மக்களின் முக்கிய பயிராக நெல், மணிலா, கரும்பு, மக்காச்சோளம் உள்ளது. இதனை காட்டுப்பன்றி, மான், மயில்கள் ஆகியவை பாழ்படுத்தி வருகிறது. ஒரு காலத்தில் காடுகளை ஒட்டி இருக்கும் கிளியூர், நத்தாமூர், குன்னத்துார், அத்திப்பாக்கம், நெடுங்கம்பட்டு, பாடியந்தல் பகுதிகளில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. தற்போது கிராமங்களுக்கு மத்தியில் இருக்கும் நிலப்பகுதிகளுக்கும் காட்டுப்பன்றி, மயில், மான்கள் படையெடுக்க துவங்கிவிட்டன.மயில்களின் இனப்பெருக்கத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, விவசாய நிலங்களில் கடந்த காலங்களில் உயிர் வேலியை அமைத்திருந்தனர். தற்போது கம்பி வேலிகளாக மாற்றப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல வனங்களை அழித்த வனத்தோட்டக் கழகம், யூக்லப்டிஸ் மரங்களை வளர்ப்பதால் புதர்கள் அழிக்கப்பட்டு விட்டது. இதனால் குள்ளநரி உள்ளிட்ட உயிரினங்கள் தங்க இடமின்றி அந்த இனமே அழிவின் விளிம்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மயில் முட்டைகளை வேட்டையாடும் நரிகள் இல்லாததால், மயில் அதிகரித்து விட்டது. காட்டுப் பன்றிகளும் தங்க இடமில்லாமல் அடர்த்தியான கரும்பு, மக்காச்சோள பயிர் பரப்பை வசிப்பிடமாக மாற்றிக் கொண்டது. இதுவே வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் நுழைய முக்கிய காரணமாக கூறப்படுகிறது.குறிப்பிட்ட வனப்பரப்பை கண்டறிந்து அதனை சரணாலயம் அமைத்து, அப்பகுதிக்குள் வனவிலங்குகளை பாதுகாப்பதன் மூலமும், விவசாய நிலங்களில் உயிர்வேலி அமைப்பதை அரசு ஊக்குவிக்க வேண்டும். அப்படி செய்தால் வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதையும், அதன் இனப்பெருக்கத்தையும் தடுக்க முடியும் என வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.வனவிலங்குகளை கட்டுப்படுத்த மின்வேலி அமைக்கும் விவசாயிகளின் சட்ட விரோத நடவடிக்கை அதிகரிக்கிறது. இந்த வனவிலங்கு, மனித மோதலை தவிர்க்க, காடுகளை பாதுகாப்பதன் மூலம் அங்கிருந்து வனவிலங்குகள் வெளியேறி பயிர்களை நாசப்படுத்தும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இதன் மூலம் இயற்கை சமநிலையுடன் அனைத்து உயிரினங்களும் பெருகாமல் சமநிலையில் வாழ வழி ஏற்படும், விவசாயமும் செழிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி