வாலாஜாபாத் : வாலாஜாபாத் பேரூராட்சி வி.வி.,கோவில் தெருவில், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால், பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாலாஜாபாத் பேரூராட்சி, 1 வது வார்டில் வி.வி.,கோவில் தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில், 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள், வசிக்கின்றன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, 10 வருடத்திற்கு முன், குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தெருக்களில், மழைநீர் தேங்காமலிருக்க மழைநீர் கால்வாய்களும் அமைக்கப்பட்டது.
இந்த கால்வாயில், அருகில் உள்ள வீடுகளிலிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால், மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாயாக மாறியது. 15 நாட்களுக்கு முன், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் கலந்து வருவதால், பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் குடிநீரை குடிக்க பயன்படுத்துவதில்லை. இது குறித்து, அப்பகுதி மக்கள், பேரூராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பேரூராட்சி செயலர் அலுவலர் செல்வராசன் கூறும்போது, '' கடந்த மாதம், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக, 6 மற்றும் 7வது வார்டு மக்கள் புகார் தெரிவித்தனர். ''அதன்படி, பைப் உடைப்பை சரி செய்து, தற்போது, சுத்தமான குடிநீர் வழங்கி வருகிறோம். 1வது வார்டிலும் பைப் உடைந்துள்ளதால் அதையும் விரைவில் சரிசெய்து சுத்தமான குடிநீர் வழங்கப்படும்'' என்றார்.