| ADDED : ஜூன் 08, 2024 11:21 PM
சென்னை: திருவல்லிக்கேணி அருகே ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உறவினருக்கு, 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, மாவட்ட 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில், ஆறு வயது சிறுமிக்கு, 2023 மார்ச் 28ல், அவரது மாமா பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இதுகுறித்து அறிந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் மாமாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.வழக்கை நீதிபதி எம்.ராஜலட்சுமி விசாரித்தார். போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி, ''குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், சிறுமியின் மாமாவுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்,'' என, தீர்ப்பளித்தார்.