உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் கோர்ட்டில் நடிகை கவுதமி ஆஜர்

காஞ்சிபுரம் கோர்ட்டில் நடிகை கவுதமி ஆஜர்

காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுார் பகுதியில், நடிகை கவுதமிக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் இருந்தது. தன் பல்வேறு சொத்துக்களை விற்பனை செய்ய, சென்னையைச் சேர்ந்த அழகப்பன், 64, என்பவருக்கு, கவுதமி அதிகார பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.தன் சொத்துக்களை மோசடியாக விற்பனை செய்து, கோடிக்கணக்கான ரூபாயை ஏமாற்றிவிட்டதாக கவுதமி அளித்த புகாரின் படி, அழகப்பன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு மட்டுமல்லாமல், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இவ்வழக்கில் அழகப்பன், அவரது மனைவி நாச்சாள், குடும்ப உறுப்பினர்கள் என ஐந்து பேர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின், ஜாமீனில் வெளியே வந்த அழகப்பன் தலைமறைவானார். நடிகை கவுதமியின் அண்ணன் ஸ்ரீகாந்த் என்பவர் அமெரிக்காவில் வசிக்கிறார். அவரது சொத்துக்களையும் அழகப்பன் மோசடி செய்ததாக, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவில், தன் அண்ணன் ஸ்ரீகாந்த் சார்பில், நடிகை கவுதமி, கடந்த மே மாதம் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில், அழகப்பனுடன், ரகுநாதன், சுகுமார் ஆகிய மூவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.தலைமறைவாக இருந்த அழகப்பனை, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கடந்த மாதம் 16ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அழகப்பனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் 2ல், நடிகை கவுதமி தலையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, மனுதாரர் கவுதமி நேற்று ஆஜரானார்.அவரது மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் வாசுதேவன், அழகப்பனுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். இந்த வழக்கில், அழகப்பனை ஐந்து நாள் காவலில் எடுக்க, போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை