தொழிற்சாலை பஸ் விபத்து 10 ஊழியர்கள் காயம்
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கிவரும் 'பாக்ஸ்கான்' மொபைல்போன் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பல ஆயிரக்கணக்காண ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த நிலையில், நேற்று மதியம், வேலுாரில் இருந்து, 40க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுடன், தொழிற்சாலை பேருந்து ஒன்று சுங்குவார்சத்திரம் வந்தது.சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பிள்ளைச்சத்திரம் அருகே, சர்வீஸ் சாலையில் இருந்து பிரதான சாலையில் செல்ல முயன்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, மீடியனில் அதிவேகமாக பேருந்து மோதியது.இதில், பேருந்தின் உள்ளே இருந்த 10 பெண் ஊழியர்கள் இடிபாடுகளில் சிக்கி, லேசான காயம் அடைந்தனர். இது குறித்த தகவலின்படி அங்கு வந்த சுங்குவார்சத்திரம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, சந்தவேலுாரில் உள்ள அரசு அவசர சிகிச்சை மையத்திற்கு அனுப்பினர்.அங்கு முதலுதவிக்குப் பின், அனைவரும் வீடு திரும்பினர். விபத்து குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.