மழைநீர் கால்வாயில் உணவு கழிவு; உணவகங்கள் தொடர்ந்து அட்டகாசம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகரில் உள்ள டி.கே., நம்பி தெரு, செட்டி தெரு, காந்தி ரோடு, காமராஜர் சாலை, கிழக்கு மற்றும் மேற்கு ராஜவீதி என நகரின் முக்கிய சாலைகள், நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.இந்த சாலைகளின் இருபுறமும், ஐந்து ஆண்டுகளுக்கு முன், மழைநீர் கால்வாய் மற்றும் சிமென்ட் கல் பதிக்க, 5 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்தன.சாலையில் மழைநீர் தேங்காமல் வடிவதற்காக கட்டப்பட்ட இந்த கால்வாய்கள், அருகில் உள்ள உணவகங்கள், டீ கடைகளின் கழிவுநீர் திறந்துவிடும் கால்வாயாக மாறிவிட்டது.வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெடுஞ்சாலைத் துறையினர், மழைநீர் வடிகால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகளை துவக்கியுள்ளனர்.அவ்வாறு, ரங்கசாமிகுளம் அருகே உள்ள மழைநீர் வடிகால்வாயை பணியாளர்கள் சுத்தம் செய்தபோது, அதில் உணவு கழிவுகள் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.உணவகத்திலிருந்து நேரடியாக மழைநீர் கால்வாயில் கழிவுநீரை திறந்து விட்டுள்ளது தெரியவந்துள்ளது. மழைநீர் கால்வாய்களை, மாநகராட்சியுடன் இணைந்து, நெடுஞ்சாலைத் துறையினர் பராமரிக்க வேண்டும். ஆனால், இந்த கால்வாய்களை எந்த துறையும் கண்டுகொள்ளாததால், கால்வாய் முழுதும் கழிவுநீர் ஓடுவது தொடர் கதையாக உள்ளது.இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'நெடுஞ்சாலைத் துறை மழைநீர் கால்வாயை கட்டுவது மட்டும் தான் வேலை.அவற்றை பராமரிப்பது, இணைப்பை துண்டிப்பது, ஆய்வு செய்வது மாநகராட்சியின் வேலை. அவர்கள் தான் ஆய்வு செய்து அபராதம் விதிக்க வேண்டும்' என்றார்.