| ADDED : ஜூன் 25, 2024 05:15 AM
படப்பை, : படப்பை அடுத்த ஆதனஞ்சேரி காலனி பகுதியை சேர்ந்தவர் தயாளன், 60. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். தயாளன் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இரவு நேரத்தில் அங்கு துாங்குவது வழக்கம். இந்த வீட்டில், நேற்று காலை கழுத்து வெட்டப்பட்ட நிலையில் தயாளன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், தயாளனுக்கும் அவரது மனைவி செல்வியின் அண்ணன் மகன் பார்த்திபனுக்கும், பூர்வீக சொத்துக்களை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது தெரிய வந்தது.இதனால் தயாளன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், பார்த்திபனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.