| ADDED : ஆக 22, 2024 12:59 AM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட, குண்டுபெரும்பேடு ஊராட்சியில், குண்டுபெரும்பேடு மேட்டு காலனி, பள்ள காலனி, ஓட்டங்கரணை உள்ளிட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.இந்த நிலையில், பள்ளக்காலனி பகுதியில் பல ஆண்டுகளாக ரேஷன் கடை இல்லை. இதனால், இப்பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, 2020- - 21ம் நிதியாண்டில், தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 15.25 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது.மூன்று ஆண்டுகளை கடந்த நிலையில், தற்போது வரை ரேஷன் கடை கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால், அதே பகுதியில் இயங்கும் கூட்டுறவுத் துறைக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் ரேஷன் பொருட்களை சேமித்து வைத்து வினியோகம் செய்யப்படுகின்றன.மேலும், கூட்டுறவுத் துறை சேமிப்பு கிடங்கும் பழைய கட்டடம் என்பதால், மழைக்காலங்களில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்கள் நனைந்து வீண்ணாவதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.