| ADDED : ஜூலை 19, 2024 01:26 AM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேருந்து நிலைய சாலையில், 5 கல்வி கூடங்கள் உள்ளன. இக்கல்வி கூடங்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர் இந்த சாலை வழியாக பயணிக்கின்றனர்.அந்த நேரத்தில், வாலாஜாபாத் சுற்றுவட்டாரத்தில் இயங்கும் கல்குவாரி மற்றும் கிரஷர்கள் போன்ற தொழிற்சாலைகளில் இருந்து ஏராளமான கனரக வாகனங்கள் இச்சாலை வழியாக இயங்குகின்றன.மேலும், ஒரகடம், தேவரியம்பாக்கம், கட்டவாக்கம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதி தனியார் தொழிற்சாலைகளில் இருந்தும் தொழிலாளர்களை ஏற்றி செல்லும் நுாற்றுக்கணக்கான தனியார் தொழிற்சாலை பேருந்துகள் அச்சமயம் இச்சாலையில் செல்கின்றன.வாலாஜாபாத் பேருந்து நிலைய சாலையில் இருந்து, வாலாஜாபாத் ரயில்வே மேம்பாலம் வழியாக, ஐ.டி.ஐ., தொழிற்கல்வி வரையிலான சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால், காலை, மாலை நேரங்களில் அச்சாலையை கடப்பதில் கூட மாணவ - மாணவியர் மற்றும் பாதசாரிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, வாலாஜாபாத் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர்.