காஞ்சி மருத்துவமனைக்குள் பார்க்கிங் வசதியில்லை சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு உள்நோயாளி மற்றும் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காகவும், சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்ப்பதற்காகவும், காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர்.மருத்துவமனைக்கு வருவோரின் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்ப, உள்ளே போதுமான 'பார்க்கிங்' வசதி இல்லை. இதனால், தங்களது வாகனங்களை மருத்துவமனைக்கு வெளியே உள்ள ரயில்வே சாலையில் இடையூறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். மேலும், தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன.வாகன போாக்குவரத்து அதிகம் உள்ள ரயில்வே சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், ஆம்புலன்ஸ் வாகனமும் அடிக்கடி நெரிசலில் சிக்கும் நிலையில் உள்ளது.எனவே, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வெளியே சாலையோரம் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கவும், மருத்துவமனை வளாகத்திற்குள், கூடுதல் பார்க்கிங் வசதி ஏற்படுத்தவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.