| ADDED : ஜூன் 24, 2024 05:44 AM
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தும், நெடுஞ்சாலையோர கட்டடங்கள் மீது பேனர்கள் வைப்பது தொடர்கதையாகி வருகிறது.இதில் சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலையோர உயரமான கட்டடங்கள் மீது விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்ந சாலை வழியே தினமும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில் தற்போது இந்த விளம்பர பேனர்கள் பல இடங்களில் ஆபத்தான நிலையில் கிழிந்து தொங்குகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். குறிப்பாக தண்டலம், நசரத்பேட்டை, பூந்தமல்லி, சென்னீர்குப்பம் உட்பட பல பகுதிகளில் நெடுஞ்சாலையோரம் விளம்பர பேனர்கள் கிழிந்து தொங்குகின்றன. வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில், தாம்பரம் அருகே, வண்டலுார், மண்ணிவாக்கம், படப்பை, ஒரகடம் ஆகிய பகுதியில், 'மெகா சைஸ்' விளம்பர பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டு உள்ளன.பேனர்களில் உள்ள வாசகங்கள், நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்ப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். கடந்த ஆண்டு வீசிய பலத்த காற்றில் படப்பை, ஒரகடம், வஞ்சுவாஞ்சேரி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் முறிந்து விழுந்து, மின் கம்பிகள் சேதமாகின. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இந்த மெகா சைஸ் பேனர்களை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்- - நமது நிருபர் குழு - .