| ADDED : ஜன 29, 2024 04:20 AM
சென்னை: சென்னை, தீவுத்திடலில் சுற்றுலா வளர்ச்சி துறையின் சார்பில், 48வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி, கடந்த 12ம் தேதி முதல் நடக்கிறது. மார்ச் இரண்டாம் வாரம் வரை நடக்க உள்ளது.இங்கு, அரசு துறைகளின் சார்பில் 51 அரங்குகள் உள்ளன. அவற்றில், அரசுத்துறைகளின் செயல்பாடுகள், முக்கிய சுற்றுலா தளங்களின் மாதிரிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.மேலும், ராட்டினம், ஊஞ்சல் உள்ளிட்ட 32 ராட்சத, சாகச விளையாட்டுகள் உள்ளன. விதவிதமான உணவு விடுதிகளும், கேளிக்கை சார்ந்த அரங்குகளும் உள்ளன. மாலையில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.விடுமுறை நாட்களில் காலை 10:00 மணி முதல், வார நாட்களில் மாலை 3:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, கண்காட்சி நடக்கிறது.இந்த கண்காட்சிக்கு கடந்த இரு வாரங்களில், 2.50 லட்சம் பேர், ஆர்வமுடன் வந்து சென்றுள்ளனர். இதில், 2 லட்சத்துக்கும் அதிகமான பெரியவர்கள், 50,000த்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பார்வையிட்டுள்ளனர்.