பிரதான குழாயில் உடைப்பு குருவிமலையில் வீணாகும் குடிநீர்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் குருவிமலை ஒட்டியுள்ள பாலாற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைத்து, காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையோரம், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக விச்சந்தாங்கல், களக்காட்டூர், வேடல், காலுார் உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குருவிமலைக்கும், களக்காட்டூருக்கும் இடையே உள்ள அம்மன் கோவில் அருகில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு மாதமாக குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதனால், குழாய் உடைப்பு ஏற்பட்ட கிராமத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.மேலும், நீண்டநேரம் மின்மோட்டார் இயங்குவதால் விரைவில் பழுதாகும் நிலை உள்ளதோடு, மின்சாரமும் விரயமாகிறது இதனால், ஊராட்சிக்கு கூடுதல் மின்கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது.எனவே, குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.