உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  அதிக சத்தம் எழுப்பும் பைக்குகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை

 அதிக சத்தம் எழுப்பும் பைக்குகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை

உத்திரமேரூர்: உத்திரமேரூரில், அதிக சத்தம் எழுப்பும் பைக்குகளால், மக்கள் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பைக்குகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். உத்திரமேரூரில், தாலுகா அலுவலகம், பி.டி.ஒ., அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகின்றன. இங்கு, சுற்றுவட்டார கிராமத்தினர் பல்வேறு தேவைகளுக்காக, தினமும் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதனால், உத்திரமேரூர் பிரதான சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சமீப நாட்களாக, உத்திரமேரூரில் சில இளைஞர்கள் தங்களிடம் உள்ள, பைக்குகளில் சைலென்ஸர்களை திறந்துவிட்டு, அதிக சத்தம் எழுப்பும் சாதனங்களை பொருத்துகின்றனர். பொதுவாக பைக்குகள் 85 - 90 டெசிபல் அளவு சத்தத்தை மட்டுமே எழுப்ப வேண்டும் . ஆனால், உத்திரமேரூர் பிரதான சாலைகளில் செல்லும் பைக்குகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, அதிக சத்தத்துடன் செல்கின்றன. இதனால், சாலையில் நடந்து செல்லும் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, மருத்துவமனை பகுதிகளி ல் அதிக சத்தத்துடன் செல்லும் பைக்குகளால், நோயாளிகளுக்கு இடையூறுஏற்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில், உத்திரமேரூர் வட்டாரத்தில், அதிக சத்தத்துடன் சென்ற மூன்று பைக்குகளை, பறிமுதல் செய்ததாக வட்டார போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர். இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் கூறியதாவது: உத்திரமேரூரில், பிரதான சாலைகளில் சைலென்சர் திறந்த நிலையில், பைக்குகள் செல்வது குறித்து புகார் வந்துள்ளன. அவ்வாறு, அதிக சத்தத்துடன் செல்லும் பைக்குகளை பறிமுதல் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்