சாம்பல் நோய் கட்டுப்படுத்த உதவி இயக்குனர் அறிவுரை
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் வட்டாரத்தில், உளுந்தில் சாம்பல் நோயை கட்டுப்படுத்துவது குறித்து, வட்டார வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் பிரபாகர் கூறியதாவது:ரபி பருவத்தில் உளுந்து பயிரிடப்பட்டுள்ளது. உளுந்தில் சாம்பல் நோய் தாக்கம் ஏற்படும். குறிப்பாக, ஊத்துக்காடு, புத்தகரம், நத்தாநல்லுார், புளியம்பாக்கம், தாங்கி, வில்லிவலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், உளுந்து சாகுபடியில் சாம்பல் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நோய், எரிசப்பே பாலிகோனி என்னும் பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது. குளிரால் ஏற்படும் ஈரப்பதத்தில், உளுந்து செடிகளின் இலைகள் சாம்பல் நிறமாக மாறும். அதன்பின் சுருங்கி, உருமாறி உதிர்ந்து விடுகிறது.இதை கட்டுப்படுத்த நோய் தாக்கிய செடிகளை அகற்ற வேண்டும். 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசல், 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும். அதிலும் கட்டுப்படவில்லை எனில், 200 மில்லி புரோபிகோனசோல் மற்றும் 500 மில்லி அசோக்ஸிஸ்ட்ரோபின் பூச்சிகொல்லி மருந்தை, 1 ஏக்கருக்கு தெளிக்க வேண்டும். அதன்பின், 15 நாட்கள் கழித்து இரண்டாவது முறையாக தெளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.