ஆதனஞ்சேரியில் மின் மோட்டார் பழுது ஒரு மாதமாக குடிநீர் சப்ளை பாதிப்பு
படப்பை:குன்றத்துார் ஒன்றியம், படப்பை ஊராட்சியில் ஆதனஞ்சேரி கிராமம் உள்ளது. இங்கு, 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, படப்பை- - ஒரத்துார் சாலையில் உள்ள கன்னி கோவில் அருகே ஆழ்துளை கிணறு அமைத்து, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் நிரப்பி, தெருக்குழாய் வாயிலாக, காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், மின் மோட்டார் பழுது காரணமாக, கடந்த ஒரு மாதமாக தெருக்குழாய்களில் குடிநீர் சரிவர வரவில்லை. இதனால், அப்பகுதிவாசிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் இரண்டு மோட்டார்களில் ஒரு மோட்டார் பழுதாகி விட்டது. இதை ஊராட்சி நிர்வாகத்தினர் சரிசெய்யவில்லை.தற்போது கோடை காலம் என்பதால், மக்களின் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தெருக்குழாய்களில், காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை மட்டும், குறைந்த வேகத்தில் தண்ணீர் வருகிறது.அது போதுமானதாக இல்லை. எனவே, மின் மோட்டாரை சரிசெய்து, ஆதனஞ்சேரியில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.