மானாவாரி பருவ நெல் சாகுபடியில் வாலாஜாபாத் விவசாயிகள் ஆர்வம்
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்தின் பல பகுதிகளில், மானாவாரி பருவ நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியத்தில், ஏரி, கிணறு மற்றும் பாலாற்று பாசனம் மூலம் விவசாயிகள் நெல், வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். குறிப்பாக, நெல் விவசாயம் முதன்மையானதாக இருந்து வருகிறது. கடந்த நவரை பருவத்தை தொடர்ந்து, சொர்ணவாரி பருவத்தில் சாகுபடி செய்த நெற்பயிர்களை தற்போது இப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். இதனிடையே, புத்தகரம், மருதம், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி பருவத்திற்கு நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி உள்ளனர். இதுகுறித்து, புத்தகரம் விவசாயிகள் கூறியதாவது: புத்தகரத்தில் பெரிய ஏரி மற்றும் கள்ளிப்பட்டு ஏரி என இரண்டு ஏரிகள் உள்ளன. இதன் மூலம் நவரை பருவத்திற்கு, 400 ஏக்கர் பரப்பிலான நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, ஏரியில் நீர் இருப்பு இல்லை என்றாலும் மானாவாரி பருவத்திற்காக, 200 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழையை தொடர்ந்து வட கிழக்கு பருவ மழை பெய்யும் என்பதால், பாசனம் குறித்த கவலையின்றி நம்பிக்கையோடு சாகுபடி செய்துள்ளோம். மானாவாரி நிலங்களில் இப்பருவத்திற்கு ஆண்டுதோறும் நெல் பயிரிடுவது வழக்கம்தான். இவ்வாறு அவர்கள் கூறினர்.