சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு கூரை வசதி அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு
காஞ்சிபுரம்:திருக்காலிமேடு உயர்நிலைப்பள்ளியில், சைக்கிள் நிறுத்துமிடத்தில் கூரை வசதி ஏற்படுத்த வேண்டும் என, மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.காஞ்சிபுரம் மாநகராட்சி திருக்காலிமேடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவியருக்காக, 'யமஹா மோட்டார்' நிறுவனம் சார்பில், 12 வகுப்பறைகளுடன் புதிதாக கட்டடப்பட்ட பள்ளி கட்டடம் திறப்பு விழா கடந்த மாதம் 10ம் தேதி நடந்தது. இப்பள்ளியில், 220க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் மாணவ- மாணவியர், தங்களது சைக்கிள் நிறுத்தும் இடத்தில், கூரை வசதி இல்லை. தற்போது, வெயில் சுட்டெரித்து வருவதால், நாள் முழுதும் வெயிலில் நிறுத்தப்படும் சைக்கிள் டியூப்கள் வெடிக்கின்றன. வால்டியூப்பில் ஓட்டை ஏற்படுகிறது. இதனால், பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் மாணவ - மாணவியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, திருக்காலிமேடு அரசு பள்ளியில் சைக்கிள் நிறுத்தும் இடத்திற்கு கூரை வசதி ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.