சேதமடைந்த மதுார் கூட்டுச்சாலையில் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்
மதுார்:மதுார் சுற்றுவட்டாரத்தில் இயங்கும் கல் குவாரி மற்றும் கிரஷர் லாரிகளால், மதுார் கூட்டுச்சாலை சேதமடைந்து, வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் சென்று வருகின்றனர். பழையசீவரம் பாலாற்று பாலம் துவங்கி, திருமுக்கூடல் வழியாக சாலவாக்கம் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையில் உள்ள மதுார் கூட்டுச்சாலை சுற்றுவட்டார கிராமங்களின் மையப் பகுதியாக உள்ளது. மதுார், அருங்குன்றம், சித்தாலப்பாக்கம், சிறுமையிலுார் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், இங்குள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மதுார் சுற்றுவட்டார கிராமங்களில் தனியார் கல் குவாரி மற்றும் கல்அரவை தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்த தொற்சாலைகளில் இருந்து லோடு ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், மதுார் கூட்டுச்சாலை வழியாக இரவு, பகலாக இயக்கப்படுகின்றன. இதனால், மதுார் கூட்டுச்சாலையில் அடிக்கடி சாலை சேதமாவதும், அவ்வப்போது பள்ளங்கள் சீர் செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. தற்காலிக பணி மேற்கொள்ளப்படும் அச்சாலை, மீண்டும் ஒரு சில நாட்களில் பழுதடைந்து, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மழை நேரங்களில் சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் விபத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, மதுார் கூட்டுச்சாலையில் கான்கிரீட் சாலை அமைத்து, நிரந்தர தீர்வுக்கு வழி ஏற்படுத்த வேண்டுமென வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.