உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாலாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட நெடுஞ்சாலை துறை திட்டம்

பாலாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட நெடுஞ்சாலை துறை திட்டம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்திலிருந்து, உத்திரமேரூர் செல்லும் வழியிலும், வந்தவாசி செல்லும் வழியிலும், பாலாறு பாய்கிறது. இந்த இரு முக்கிய சாலைகளின் குறுக்கே, ஓரிக்கை மற்றும் செவிலிமேடு ஆகிய இரு இடங்களில், 25 ஆண்டுகளுக்கு முன்பாக, தரைப்பாலம் மட்டுமே இருந்த நிலையில், 1997 - -98ம் ஆண்டுகளில், இரு சாலைகளின் குறுக்கே புதிதாக உயர்மட்ட பாலங்களை நெடுஞ்சாலைத் துறை கட்டியது.இதனால், உத்திரமேரூர் மற்றும் வந்தவாசி மார்க்கமாக சென்று வரும் வாகனங்களுக்கு, இந்த இரு பாலங்களும் அதிகளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.ஓரிக்கையில் உள்ள பாலாறு பாலத்தை காட்டிலும், செவிலிமேடு பகுதியில் உள்ள பாலாறு பாலத்தை அதிக வாகனங்கள் பயன்படுத்துகின்றன. காரணம், வந்தவாசி மட்டுமல்லாமல், திண்டிவனம், செய்யாறு, திருவண்ணாமலை, சேலம் போன்ற ஊர்களுக்கு இந்த வழியாக தான் செல்ல வேண்டும்.பாலம் கட்டி, 25 ஆண்டுகளான நிலையில், இதுவரை இந்த பாலங்களில் மின் விளக்கு வசதி கிடையாது. இது ஒருபுறம் இருக்க, செவிலிமேடு உயர்மட்ட பாலம் சிறிது, சிறிதாக சேதமாகி வந்தது. பாலத்தின் சாலையில் சிமென்ட் காரை பெயர்ந்து பல இடங்கள் சேதமாகி காணப்பட்டன.கம்பிகள் தெரியும் அளவுக்கு பாலம் சேதமானது. பாலத்தின் இணைப்பு பகுதியில் பல இடங்களில் ஓட்டை ஏற்பட்டது. பள்ளங்களில் விழுந்து வாகன ஓட்டிகள் பலரும் காயமடைந்தனர்.கனரக வாகனங்கள் விதிமுறைகளை மீறி அதிக எடையுள்ள பொருட்களை ஏற்றி செல்வதாலும், பாலம் சேதமானது. ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் இந்த பாலம் வழியாக பிற மாவட்டங்களுக்கு சென்று வருகின்றன. நெடுஞ்சாலை துறையினர் பலமுறை இப்பாலத்தை சீரமைத்த போதும், தொடர்ந்து மோசமான நிலையில் பாலம் உள்ளது. இதனால், செவிலிமேடு பாலாறு பாலத்திற்கு மாற்றாக, அருகிலேயே புதிதாக ஒரு உயர்மட்ட பாலத்தை கட்ட நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டு வருகின்றனர். புதிதாக கட்டப்பட வேண்டிய பாலத்தின் உயரம், நீளம், செலவினம், துாண்கள், திட்ட மதிப்பீடு போன்றவை குறித்து, நெடுஞ்சாலைத் துறையினர் ஆலோசிக்கின்றனர்.சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழக அதிகாரிகளுடன், தமிழக நெடுஞ்சாலைத் துறையினர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.புதிய உயர்மட்ட பாலம் பற்றி அறிக்கை தயாரித்த பின், நெடுஞ்சாலைத் துறையின் மேலிடத்திற்கு, காஞ்சிபுரத்திலிருந்து கருத்துரு அனுப்பி வைக்க உள்ளனர்.இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:செவிலிமேடு பாலத்தில் எண்ணற்ற கனரக வாகனங்கள் செல்கின்றன. ஏராளமான லாரிகள் விதிமீறி அதிக எடையை ஏற்றி செல்கின்றன. புதிய பாலம் கட்டுவது பற்றி, சாலை மேம்பாட்டு கழக அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம்.அவர்கள் தான் இதுபற்றி ஆய்வு நடத்துகின்றனர். புதிய பாலம் கட்டுவது தொடர்பாக ஆய்வு செய்து, எங்கள் துறை மேலிடத்துக்கு திட்ட மதிப்பு மற்றும் கருத்துரு அனுப்புவோம்.பாலத்தில் ஆய்வு நடத்த வேண்டியுள்ளது. புதிய பாலம் கட்ட வேண்டிய தேவை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை