காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புகளால் புறநோயாளிகள் எண்ணிக்கை அதிகரி ப்பு
காஞ்சிபுரம்:காலநிலை மாற்றம் காரணமாக காஞ்சிபுரத்தில் அரசு, தனியார் என அனைத்து வகையான மருத்துவமனைகளிலும், காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்னைகளுடன் புறநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இடையே இரு நாட்கள் வெயிலும், மழையும் மாறி மாறி நிலவியது. காலநிலை மாற்றம் இவ்வாறு மாறி மாறி வருவதால், மாவட்டம் முழுதும் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும், சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னைகளும் அதிகரித்துள்ளது. சிறுவர்கள், முதியோர், இணை நோயாளிகள், நடுத்தர வயதினர் என, அனைத்து தரப்பினருக்கும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் புறநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில், ஐந்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், 18 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஐந்து நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள், 143 கிராமப்புற துணை சுகாதார நிலையங்கள், 26 நகர துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில், சமீப நாட்களாக காய்ச்சல், இருமல், சளி, மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை வலி போன்றவைகளுக்கு சிகிச்சை பெற புறநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தினமும் சராசரியாக 3,000க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். சமீப நாட்களாக, இந்த எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் கூடியிருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பருவகால நோய்கள் காரணமாக இதுபோன்ற தொந்தரவுகள், மக்களுக்கு வருவது இயல்பு என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், தற்போதைய சூழலில் கொசு உற்பத்தி காரணமாக, மாதந்தோறும் 20 முதல் 30 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிப்படைவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த ஏடிஸ் கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும். ஆனால், உள்ளாட்சிகளிலும், சுகாதார துறையிலும் எடுக்கும் நடவடிக்கைகள் போதிய அளவில் இல்லாததால், ஆண்டுதோறும் டெங்கு காய்ச்சலால், நுாற்றுக்கணக்கானோர் பாதிப்பு க்குள்ளாகி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், நுாற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இருப்பினும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்கிறது. டெங்கு காய்ச்சலால் யாராவது பாதிக்கப்பட்டால், அவர்கள் வசிக்கும் இடங்களை சுத்தம் செய்து, மருத்துவ முகாமிட்டு, வேறு யாருக்கும் டெங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்வதாக, மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.