இளைஞர் நீதி குழும உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதி, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 2015 மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட இரண்டு சமூக நல உறுப்பினர்கள் மதிப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.குழந்தைகள் தொடர்பான உடல் நலம் கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது ஏழு ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள், 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயது பூர்த்தி செய்யாதவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இயக்குனர் முகவரிக்கு, மார்ச் மாதம் 7 ம் தேதிக்குள் கிடைக்க பெறுமாறு விண்ணப்பிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.