வாலாஜாபாத் ஒன்றியத்தில், பல்வேறு ஊராட்சிகளில், விளையாட்டு உபகரணங்களை
பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் இருப்பதால், பல லட்சம் ரூபாயில்
கட்டப்பட்ட விளையாட்டு திடல், பயன்பாடு இன்றி வீணாகி வருகின்றது.வாலாஜாபாத்
ஒன்றியத்தில் 61 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில், அனைத்து கிராம அண்ணா
மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில், வளர்ச்சிப்
பணிக்காக 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.இந்நிதியில் புதிய
கட்டடப்பணிகள், பள்ளி வகுப்பறை கட்டுதல், சிமென்ட் சாலைகள் அமைத்தல், தெரு
விளக்குகள் பொருத்துதல், புதிய குளம் வெட்டுதல், ஏற்கனவே உள்ள குளங்களை
தூர்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவரை தவிர, மாணவர்கள்
விளையாடுவதற்காக, விளையாட்டுத்திடல் அமைக்கப்பட்டது.அந்தத் திடலில்,
ஊஞ்சல், சறுக்குமரம், வாலிபால் நெட் போன்றவை அமைக்கப்பட்டது. விளையாட்டு
உபரகணங்களும் வாங்கப்பட்டன. இவை, சில ஊராட்சிகளில் மட்டுமே பயன்பாட்டில்
உள்ளன. ஒழையூர், சிறுவாக்கம், ஈஞ்சம்பாக்கம், ஏனாத்தூர், கரூர், கீழ்ஒட்டிவாக்கம்
உட்பட பல ஊராட்சிகளில், விளையாட்டுத் திடல் புதர் மண்டி, யாரும் பயன்படுத்த
முடியாத நிலையில் உள்ளது. பல லட்சம் ரூபாய் செலவழித்து, திடலில்
பொருத்தப்பட்ட விளையாட்டு உபரகணங்கள் துருப்பிடித்து வீணாகின்றன.இது
குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் கூறும்போது,' அனைத்து
ஊராட்சிகளிலும், விளையாட்டுத் திடலில் உள்ள புதர்களை அகற்றவும், விளையாட்டு
தடவாளப் பொருட்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், நடவடிக்கை எடுக்கும்படி
ஊராட்சி தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில், அவை பயன்பாட்டிற்கு
கொண்டு வரப்படும்' என்றார்.நிதி ஒதுக்கியும் பலனில்லைஅனைத்து கிராம அண்ணா
மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்ட ஊராட்சிகளில், விளையாட்டுப்
போட்டிகள் நடத்தவும், விளையாட்டு தடவாளப் பொருட்களை பராமரிக்கவும்,
வருடத்திற்கு தமிழக அரசு சார்பில், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இப்பணத்தை ஊராட்சி தலைவர்கள் முறையாக பயன்படுத்துவதில்லை, எனக்
குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விளையாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியை,
விளையாட்டிற்காக பயன்படுத்த, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சு.மணவாளன்-