| ADDED : டிச 04, 2025 04:25 AM
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மலைப்பட்டில் இருந்து, மாகாணியம் செல்லும் சாலை சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதுார் -- மணிமங்கலம் சாலையில் மலைப்பட்டில் இருந்து, மாகாணியம் செல்லும் சாலை பிரிந்து செல்கிறது. மாகாணியம் அழகூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இந்த சாலையின் வழியாக ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ - மாணவியர், தொழிற்சாலை செல்வோர் மற்றும் பல்வேறு தேவைக்காக தினமும் 1,000க்கும் மேற்பட்டோர் வாகனங்களில் இந்த சாலையில் சென்று வருகின்றனர். 'டிட்வா' புயலால் பெய்த மழையில் இந்த சாலை ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. குறிப்பாக, மலைப்பட்டு பகுதியில் சாலை பெயர்ந்து, மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையில் உள்ள பள்ளம் தெரியாமல், நிலைத்தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, மலைப்பட்டில் சேதமான சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.