நெடுஞ்சாலையில் திரியும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்சாலைகளுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், வல்லம், வடகால், போந்துார் உள்ளிட்ட கிராமங்களில் மாடுகளை வைத்திருப்பவர்கள், கொட்டகைளில் வைத்து பராமரிப்பது இல்லை. இதனால் அவை சாலையில் திரிவதுடன், நெடுஞ்சாலையோரங்களில் படுத்து ஓய்வெடுக்கின்றன. அவை, திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள், மாட்டின் மீது மோதி, விழுந்து காயமடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே, நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் திரியும் மாடுகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.