புத்தேரி சாலையோர பள்ளத்தால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
புத்தேரி:காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி - சாலபோகம் சாலையோரம் உள்ள பள்ளத்திற்கு தடுப்பு இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரியில் இருந்து பிள்ளையார்பாளையம், கீழ்கதிர்பூர், பாக்குபேட்டை, கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர், புத்தேரி - சாலபோகம் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையோரம் பள்ளம் உள்ள பகுதியில், சாலை தடுப்பு அமைக்கவில்லை. போதுமான மின்விளக்கு வசதி இல்லாத அப் பகுதியில், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இரு நாட்களுக்கு முன், இரவு நேரத்தில் இவ்வழியாக சென்ற ஆட்டோ ஒன்று, கனரக வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது, சாலையோர பள்ளத்தில் சாய்ந்தது. இதில், ஆட்டோ ஓட்டுநர் காயத்துடன் உயிர் தப்பினார். இப்பகுதியில் அடிக்கடி வாகனத்தில் வருபவர்கள் பள்ளத்தில் விழுந்து, விபத்தில் சிக்குவது வாடிக்கை யாக உள்ளது. எனவே, புத்தேரி - சாலபோகம் சாலையோர பள்ள பகுதியில் தடுப்பு அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.