பொது கட்டடங்கள் வாலாஜாபாதில் திறப்பு
வாலாஜாபாத்:வாலாஜாபாத் வட்டாரத்தில், 89.45 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொது கட்டடங்கள் நேற்று திறந்து பயன்பாட்டிற்கு விடப்பட்டன. வாலாஜாபாத் அடுத்த, தம்மனுாரில் உத்திரமேரூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், 50 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக சமுதாயக்கூடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதேபோல, காவாந்தண்டலத்தில் 15 லட்சம் ரூபாயில் புதிய அங்கன்வாடி கட்டடமும், இளையனார்வேலுார் ஊராட்சி, வள்ளிமேடு கிராமத்தில் 9.45 லட்சம் ரூபாய் செலவில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடமும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. மேலும், அவளூர் கிராமத்தில், காஞ்சிபுரம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கிழ், 15 லட்சம் ரூபாய் செலவில் நாடக மேடை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த புதிய கட்டடங்களுக்கான பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதையடுத்து, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் நேற்று பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.