பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 23வது வார்டு மாகாளியம்மன் கோவில் தெரு மற்றும் கன்னி கோவில் தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள குறுக்கு தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கடந்த ஒரு வாரமாக ‛மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவுநீர், சாலையில் வழிந்தோடி வருகிறது.இதனால், அப்பகுதியில் வசிப்போர் மட்டுமின்றி, இவ்வழியாக செல்வோர் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. வேகமாக செல்லும் வாகனங்களால், கழிவுநீர் தெளிப்பதால் நடந்து செல்வோர் மனஉளச்சலுக்கு ஆளாகின்றனர்.தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.