காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 13 ஊராட்சிகளில், சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம், நாளை நடைபெற உள்ளது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் பிரதமர் நினைவு குடியிருப்பு திட்டம் ஆகிய திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன. வாரந்தோறும் சில ஊராட்சிகளை தேர்வு செய்து, வரவு - செலவு கணக்குகளை சமூக தணிக்கை செய்து, மாநில ஊரக வளர்ச்சி தணிக்கை சங்கத்திற்கு, அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கமாக உள்ளது. தற்போது, 22வது சுற்றுக்கு முட்டவாக்கம், திருப்புட்குழி, புஞ்சையரசந்தாங்கல், சேந்தமங்கலம், செங்காடு, வடக்குப்பட்டு, மலைப்பட்டு, துரைப்பாக்கம், ஆதனுார், திருவாணைக்கோவில், விசூர், ஒழுகரை, பாலேஸ்வரம் ஆகிய, 13 ஊராட்சிகளில் சமூக தணிக்கை நடைபெறுகிறது. இதற்கு, சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நாளை நடைபெறும். நிறை, குறைகளை பொதுமக்கள் முன் சமர்ப்பிக்கப்பட உள்ளது.