வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 10ல் ராபத்து உற்சவம்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசிக்கு, 10 நாட்களுக்கு முன், பகல் பத்து உற்சவமும், பின் 10 நாட்கள் ராபத்து உற்சவமும் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, பகல் பத்து உற்சவம் நேற்று துவங்கியது. இதில், ஆழ்வார்கள் நேற்று மதியம், மூலவர் சன்னிதி முன் எழுந்தருளினர். அப்போது, வேத சாற்றுமறையும், தொடர்ந்து ஆழ்வார்களுக்கு மரியாதைசெய்யப்பட்டது. வரும் 9ம் தேதி வரை பகல் பத்து உற்சவம் நடக்கிறது.வரும் 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி நடைபெறுகிறது. இதில், காலை முதல் மதியம் வரைவரதராஜ பெருமாள் ரத்ன அங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து 10 நாட்களுக்கு ராபத்து உற்சவம் நடக்கும்.மாலை 6:00 மணிக்கு கோவில் ராஜகோபுரம் அருகில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் பெருமாள் எழுந்தருள்வார். இரவு 7:30 மணி வரை சாற்றுமறை நடக்கும். தொடர்ந்து, கோவில் உட்பிரகாரத்தில் உள்ள கிளி மண்டபத்தில் பெருமாள் எழுந்தருள்வார்.சுவாமியுடன் ஆழ்வார்களும் எழுந்தருள்வர். அங்கு, இரவு 9:30 மணிக்கு சாற்றுமறை நடக்கும். கடைசி நாளில் நம்மாழ்வார், பெருமாள் திருவடிதொழல் நிகழ்ச்சி நடக்கும். விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.