உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 440 மனுக்களை பெற்ற கலெக்டர்

காஞ்சியில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 440 மனுக்களை பெற்ற கலெக்டர்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. இதில், பட்டா கோரியும், ஆக்கிரமிப்பு அகற்றுதல், வேலைவாய்ப்பு, குடிநீர், சாலை என பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 440 பேர் மனு அளித்தனர். மாற்றுத்திறனாளிகள் உட்பட பயனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்த கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

போராட்டத்தால் பரபரப்பு

உத்திரமேரூர் தாலுகாவிற்குட்பட்ட காட்டுப்பாக்கம் கிராமத்தில் பொதுப்பாதையை தனி நபர் சொந்தம் கொண்டாடுவதாக, அய்யப்பன் என்பவர், மனைவி, மூன்று பிள்ளைகளுடன், மக்கள் குறைதீர் கூட்டரங்கு வெளியே அமர்ந்து போராட்டம் நடத்தினார். பேச்சு நடத்திய போலீசார், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷிடம் அவரை அழைத்து சென்றனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அய்யப்பன் அங்கிருந்து சென்றார்.

இடுகாடுக்கு சாலை வசதி

வாலாஜாபாத் தாலுகாவிற்குட்பட்ட கீழ்பேரமநல்லுார் கிராமத்தில், ஆதிதிராவிட மக்கள் 1,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.ஆனால், இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்ய இடுகாடுக்கு அழைத்து செல்ல பாதை வசதி இல்லை. தனிநபர்களின் விவசாய வயல் மீது செல்வதால், கிராமத்தில் பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. இதனால், இடுகாட்டுக்கு செல்ல பாதை வசதியும், கூடுதல் இடத்தை ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய பைப்லைன்

உத்திரமேரூர் வட்டாரத்துக்குட்பட்ட அழிசூர் காலனி கிராமத்தில், 100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனர். இங்கு, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.இந்த தொட்டிக்கு வரும் பிரதான பைப்லைன், 5 கி.மீ., துாரம் சுற்றி வருவதால், நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றுவதில் சிரமமாக உள்ளது.எனவே, அருகேயுள்ள கூட்டுக் குடிநீர் திட்ட குழாயிலிருந்து, எங்கள் ஊருக்கு புதிய பைப் லைன் அமைத்து தர வேண்டும்.இவ்வாறு பயனாளிகள் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்