காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மிக பழமையான மஞ்சள் நீர் கால்வாய், 40 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணிகள் பெரும்பகுதி முடிந்த நிலையில், நிதி பற்றாக்குறையால் 6 கோடி ரூபாய் கேட்டு, அரசுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை அனுப்பி உள்ளது. காஞ்சிபுரம் நகரில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், பல நுாறு ஆண்டுகளுக்கு முன், மன்னர் காலத்தில், மஞ்சள் நீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இக்கால்வாய் கைலாசநாதர் கோவில் அருகே உள்ள, புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது. நகரின் அனைத்து பகுதிகளையும் கடந்து செல்லும் இக்கால்வாய், 25 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. அப்போது, கால்வாய் ஓரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கால்வாயின் இருபுறமும் கருங்கற்கள் கொண்டு தடுப்பு சுவர் கட்டப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் கால்வாயின் இருபுறம் உள்ள தடுப்பு சுவர்கள் சிறிது, சிறிதாக சேதமடைந்ததால், புதி தாக கால்வாயை சீரமைத்து, இருபுறமும் கான்கிரீட் தடுப்பு சுவர் மற்றும் மூடுகால்வாய் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதற்காக, தமிழக அரசால், கடந்தாண்டு 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நிதி ஒதுக்கிய பின் கடந்த பிப்ரவரி மாதம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டினார். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக மஞ்சள் நீர் கால்வாயில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி துவங்கி நடக்கிறது. திருக்காலிமேடு, பல்லவர்மேடு போன்ற பகுதிகளில் தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்தது. இரு பக்கமும் கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டுவது மட்டுமல்லாமல், கால்வாயின் தரையிலும் கான்கிரீட் அமைக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட, 40 கோடி ரூபாய்க்கு பணிகள் முடிந்திருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், பல இடங்களில் கால்வாயின் சுவர் உடைந்து காணப் படுகின்றன. கால்வாயின் கான்கிரீட் தரை அமைக்கும் பணிகளும் நடக்கவில்லை. தற்போது 90 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள சீரமைப்பு பணியை முடிக்க, 6 கோடி ரூபாய் கூடுதலாக தேவைப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பாலசுப்ர மணியத்திடம் கேட்ட போது, ''மஞ்சள் நீர் கால்வாயின் மீதமுள்ள சில பணிகளுக்காக, கூடுதல் நிதி தேவைப்படுகிறது. அரசிடம் 6 கோடி ரூபாய் கேட்டு திட்ட அறிக்கை அனுப்பி உள்ளோம். நிதி வந்தவுடன் பணிகள் துவங்கும்,'' என்றார்.