உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குடிநீர் மையம் கவலைக்கிடம் மாநகராட்சி நிர்வாகம் பாராமுகம்

குடிநீர் மையம் கவலைக்கிடம் மாநகராட்சி நிர்வாகம் பாராமுகம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணியரின் தாகம் தீர்க்கும் வகையில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், 2018ம் ஆண்டு சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 7 லட்சம் ரூபாய் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் திறக்கப்பட்டது.சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணியரும், நடைபாதை, தள்ளுவண்டி வியாபாரிகளும், பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களும் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், குடிநீர் மையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புச்சுவர் பேருந்து மோதியதில், ஆறு மாதங்களுக்கு முன் சேதமடைந்தது. மேலும், குழாய்கள் பொருத்தப்பட்டுள்ள பகுதியில் உள்ள சிமென்ட் தடுப்புகள் சேதமடைந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன.குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், கடந்த மாதம் பழுதடைந்தது. இந்த இயந்திரத்தை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை. இதனால், குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க வரும் பயணியர், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.இதனால், பணம் செலவழித்து கடைகளில் தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டிய நிலை உள்ளது. லட்சகணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் பயன்பாடின்றிக வீணாகிறது.எனவே, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள பழுதடைந்த சுத்திகரிப்பு இயந்திரத்தை பழுது நீக்கி, பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை