உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரியல் எஸ்டேட் தொழில் திருப்போரூரில் அமோகம்

ரியல் எஸ்டேட் தொழில் திருப்போரூரில் அமோகம்

திருப்போரூர், திருப்போரூர் ஒன்றியத்தில், ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்துள்ள நிலையில், சாமானியர்கள் இடம்வாங்குவது எட்டாக்கனியாக மாறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள கேளம்பாக்கம், படூர், சிறுசேரி, நாவலுார் உள்ளிட்ட பகுதிகள், சென்னையின் புறநகர் பகுதிகளாக உள்ளன. ஓ.எம்.ஆர்., சாலையில் நாவலுார் முதல் பையனுார் வரை ஐ.டி., நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக சிறுசேரி சிப்காட் பகுதியில், 30க்கும் மேற்பட்ட ஐ.டி., நிறுவனங்கள்; ஆலத்துார் சிட்கோவில் கெமிக்கல், மருந்து தொழிற்சாலைகள் என, 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. உள்ளூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மேற்கண்ட நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். அதேபோல, பிரபல தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள், பல்கலைகளும் திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ளன. இதனால், சென்னை மற்றும் வெளியூர் தொழிலதிபர்கள், முதலீடுக்காக திருப்போரூர் ஒன்றிய பகுதிகளைத் தேர்வு செய்து, இடம் வாங்கி முதலீடு செய்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சிறிய கட்டுமான நிறுவனங்கள் முதல் முன்னணி கட்டுமான நிறுவனங்கள் வரை, போட்டி போட்டு, புதிய மனைப் பிரிவுகள் மற்றும் அடுக்குமாடி கட்டடங்களை உருவாக்கி, மக்களை ஈர்த்து வருகின்றன. ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டியுள்ள இடங்களின் அமைவிடத்தைப் பொறுத்து, சதுர அடி இடம் 2,000 முதல் 10,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒரு சென்ட் கணக்கில், 9 லட்சம் முதல் 44 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது. அதேபோல், அடுக்குமாடி குடியிருப்பு, இரண்டு தளங்கள் கொண்ட 'வில்லா' வீடுகள், உயர் சொகுசு அடுக்குமாடி வீடுகள், குறைந்தபட்சம் 40 லட்சம் ரூபாய் முதல் 3.50 கோடி ரூபாய் வரை விலை போகின்றன. ஓ.எம்.ஆர்., சாலையைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், நிலங்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள், ரியல் எஸ்டேட் தொழில் தீவிரமடைந்து வந்தாலும், விலைவாசி அதிகரிப்பு காரணமாக நிலம் வாங்கி சொந்த வீடு கட்டுவது நடுத்தர, சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறி வருகிறது. பத்திரப்பதிவு ஜரூர் திருப்போரூரில் கல்வித் தகுதிக்கேற்ப துாய்மைப் பணி முதல் ஐ.டி., பணி வரை கிடைக்கிறது. இதனால், சொந்த வீடு வாங்கும் ஆசையில், சென்னையில் வசிக்கும் மக்கள் திருப்போரூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றனர். இங்கு, ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட பத்திரப் பதிவுகள் நடக்கின்றன. அதேபோல, இடத்தின் மதிப்பை பொறுத்து ஒரு பத்திரப் பதிவிற்கு, 20,000 முதல் 5 லட்சம் ரூபாய் வரை, அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை