கொரியர் ஆபீசில் திருடிய மூன்று வாலிபர்கள் கைது
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், குமாரசாமி அவென்யூவில் வசிப்பவர் வந்தேமாதரம், 34. இவர், காஞ்சிபுரம் எம்.எம்.அவென்யூவில் கொரியர் சர்வீஸ் ஆபீசில் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 30ம் தேதி இரவு 10:00 மணிக்கு, கொரியர் அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை வழக்கம்போல் அலுவலகம் வந்து பார்த்தபோது, அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, 15,000 ரூபாய் திருடுபோனது தெரியவந்தது.இதுதொடர்பாக, விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில், வந்தேமாதரம் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரித்து வந்தனர். 'சிசிடிவி' கேமரா, மொபைல் டவரில் பதிவான எண்கள் போன்ற விபரங்களை அடிப்படையாக வைத்து விசாரித்ததில், மூவர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து, ஓரிக்கையைச் சேர்ந்த விமல், 22, திருவண்ணாமலையைச் சேர்ந்த சூர்யா, 22, காஞ்சிபுரம் ஜே.ஜே.நகரைச் சேர்ந்த சின்னா, 24, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.