ஆர்ப்பாட்டம், மறியல் செய்த போக்குவரத்து ஊழியர்கள் கைது
காஞ்சிபுரம்:அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மறுக்கப்படுவது, ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன் வழங்கப்படாதது, மருத்துவ காப்பீடு இல்லாதது, புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தி வருகிறது. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, சிறை நிரப்பும் போராட்டம் நடத்த சி.ஐ.டி.யூ., முடிவு செய்தது. அதன்படி, தமிழகம் முழுதும் நேற்று சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், போக்குவரத்து ஊழியர்கள் பலரும் நேற்று ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்ற முழக்கங்களை எழுப்பினர். போக்குவரத்து ஊழியர்கள், 105 பேரை போலீசார் கைது செய்தனர்.