ஒரே நேரத்தில் 89டி பஸ்கள் அடுத்தடுத்து செல்வதால் அவதி
குன்றத்துார்,:குன்றத்துாரில் இருந்து சோமங்கலம், வரதராஜபுரம் வழியே தாம்பரத்திற்கு '89டி' என்ற தடம் எண்ணில், ஐந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளால் 50 கிராம மக்கள் பயனடைகின்றனர்.இந்நிலையில், இந்த பேருந்துகள் குறிப்பிட்ட நேர இடைவெளியில் வந்து செல்லாமல், ஒரே நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து செல்கின்றன. இதனால், மற்ற நேரங்களில் பேருந்து கிடைக்காமல், மணிக்கணக்கில் பயணியர் காத்திருந்து அவதியடைகின்றனர்.குறிப்பாக, காலை வேலைக்கு செல்வோரும், மாலை வேலை முடித்து வீட்டிற்கு திரும்புவோரும், பேருந்து கிடைக்காமல் வேதனை அடைகின்றனர்.காலை மற்றும் மாலையில், அரை மணி நேர இடவெளியில் இந்த வழித்தடத்தில் பேருந்தை இயக்க வேண்டும் என, பயணியர்கள் எதிர்பார்க்கின்றனர்.