| ADDED : ஜன 24, 2024 10:39 PM
சென்னை:சென்னை, மேற்கு முகப்பேரைச் சேர்ந்தவர் ஜெயந்தி, 36; தனியார் அழகு நிலையத்தில் பணிபுரிகிறார். இவர், தன் இரு காதுகளில் கம்மல் போடும் ஓட்டையை அடைப்பதற்காக, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் அழகு நிலையத்தை அணுகியுள்ளார்.கடந்த ஜூன் மாதம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் அவரது இரு காதுகளும் அழுகி உள்ளன. இதையடுத்து, தனியார் மருத்துவமனை வாயிலாக, காதுகளின் கீழ்ப்பகுதி அகற்றப்பட்டன. இதற்கான செலவை, அழகு நிலையம் ஏற்றது. தற்போது, 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்வதற்காக ஜெயந்தி, அழகு நிலையத்தை அணுகியுள்ளார். ஆனால், அவர்கள் பணம் தர மறுத்துள்ளனர். இதையடுத்து, அரும்பாக்கம் போலீசில் நேற்று ஜெயந்தி புகார் அளித்தார்.இதுகுறித்து ஜெயந்தி கூறியதாவது:அரும்பாக்கம், அபி பார்லருக்கு சென்றிருந்தேன். என் காதுகளில் கம்மல் போடும் பகுதியில் ஓட்டை அடைப்பதற்கான 'இயர் லுாப்' சிகிச்சை அளிப்பதாக, அழகு நிலைய நிபுணர்கள் கூறினர். இதை நம்பி நானும் சிகிச்சை பெற்றேன். நான்கு நாட்களுக்கு பின், காதுகள் மரத்தன. மீண்டும் அதேபோல் சிகிச்சை அளித்தனர். காதுகளில் 20 நாட்களுக்கு பின் காதுகள் அழுகி நாற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து, நிலையத்தில் கேட்ட போது, அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்து, காதுகள் அழுகிவிட்டதாவும், உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.வானகரம் அப்பல்லோவில் சிகிச்சை அளித்து, அதற்கான செலவுகளை நிலைய உரிமையாளர்கள் ஏற்றனர். அதன்பின் நான்கு மாதங்களுக்குப் பின், 'பிளாஸ்டிக் சர்ஜரி' சிகிச்சைக்காக நிலையத்தை அணுகிய போது அலட்சியமாக செயல்படுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினர்.