நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில், பயணத்தின் போது தாயிடம் பரிவாக பேசி, மகளை தனியாக பயணம் செய்ய வைத்து, மயக்க பிஸ்கட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த ஆம்னி பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், கோவையில் உள்ள கல்லுாரியில் எம்.எஸ்சி., இறுதி ஆண்டு படித்து வருகிறார். நான்கு மாதங்களுக்கு முன், தன் தாயுடன் ஆம்னி பஸ்சில் பயணித்தார். பஸ்சில், களியக்காவிளையைச் சேர்ந்த அனிஷ், 36, டிரைவராக இருந்தார். தாய், மகளிடம் பாசமாக பேசி, 'எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்; செய்கிறேன்' என்றார். பின், தாயிடம், 'நீங்கள் எதற்கு வீணாக அலைகிறீர்கள்? மகள் வரும் போது சொல்லுங்கள்; அவளை பத்திரமாக நானே கல்லுாரியில் விட்டு விடுகிறேன்' என்றும் கூறியுள்ளார். அதை நம்பி, தாயும், தன் மகளை, டிரைவராக அனிஷ் வரும் பஸ்சில் தனியாக அனுப்பினார். மாணவி, நவ., 9ம் தேதி கோவையிலிருந்து நாகர்கோவிலுக்கு தனியாக வந்து கொண்டிருந்த போது, 'பசிக்கும் போது சாப்பிடு' என்று கூறி, மாணவிக்கு, அனீஷ் பிஸ்கட் கொடுத்துள்ளார். அதன்படி, பிஸ்கட் சாப்பிட்ட மாணவி, சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்துள்ளார். மறுநாள் காலை, பஸ் கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் வந்த போது, மாணவியிடம் அனீஷ், 'நமக்குள் எல்லாம் முடிந்து விட்டது' என, அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதன்பின் தான், அவர் கொடுத்தது மயக்க பிஸ்கட் என்பது மாணவிக்கு தெரிந்தது. 'இதை யாரிடமாவது கூறினால் தாயையும், உன்னையும் கொன்று விடுவேன்' என மிரட்டியதால், மாணவி மவுனமாக இருந்து விட்டார். பின், இதை சொல்லியே இருமுறை வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். அதை வீடியோ எடுத்து வைத்திருந்த அனீஷ், பின், அதை காட்டி மிரட்ட துவங்கியதால், மாணவி தாயிடம் விஷயத்தை கூறினார். மாணவியின் தாய் கொடுத்த புகாரில், மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அனீஷை கைது செய்தனர். அனீஷுக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர்.