அய்யா வைகுண்டர் குறித்து தவறாக மொழிபெயர்ப்பு டி.எஸ்.பி.எஸ்.சி.,க்கு கண்டனம்
நாகர்கோவில்:டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில் கேள்வி மொழிபெயர்ப்பு நடந்துள்ளதற்கு பொறுப்பேற்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை: இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் அய்யா வைகுண்டர் குறித்த கேள்வியின் ஆங்கில மொழிபெயர்ப்பில் முடி சூடும் பெருமாள் என்ற அவரின் பெயரை முடிவெட்டும் கடவுள் என்று மொழி பெயர்த்துள்ளனர். தமிழக அரசு பணிக்கான தேர்வில் பல கோடி மக்கள் வணங்குபவரின் மற்றொரு பெயரை இத்தனை கவனக்குறைவாக பொறுப்பின்றி மொழிபெயர்த்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. தவறு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு பொறுப்பேற்று டி.என்.பி.எஸ்.சி., தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும். மேலும் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க உரிய கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.