கரூர்: கரூரில், இரண்டு மையங்களில் நீட் தேர்வை, 1,936 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்.,-பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) இன்று நடக்கிறது.இதில், கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 736 மாணவ, மாணவிகள், கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொங்கு அறிவியல் கலைக்கல்லுாரியில், 1,200 மாணவ, மாணவிகள் என மொத்தம், 1,936 பேர் நீட் தேர்வு எழுதவுள்ளனர்.அவர்களுக்கு மதியம், 2:00 முதல் மாலை, 5:20 மணி வரை தேர்வு நடக்கிறது. இதற்காக, பிற்பகல், 1:15 மணிக்கு தேர்வறைக்கு மாணவ, மாணவிகள் செல்ல வேண்டும். 1:30 மணி முதல், 1:45 மணி வரை முக்கிய அறிவுறுத்தல் வழங்கி, சீட்டு சரி பார்க்கப்படும். 1:45 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, 2:00 மணியளவில் தொடங்கி, மாலை, 5:20 மணிக்கு தேர்வு நிறைவடையும்.