| ADDED : ஜூன் 21, 2024 07:05 AM
கரூர் : கரூரில், மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள் வீசப்பட்டுள்ளதால், அதன் மூலம் நோய் பரவும் அபாயம் உள்ளது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில், அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அரசு பள்ளிக்கு செல்லும் சாலையின் இரண்டு புறங்களிலும், குப்பை கொட்டப்பட்டு மலை போல் குவிந்துள்ளது. கொட்டப்பட்ட குப்பைக்கு அடிக்கடி தீ வைக்கும் நிகழ்வும் நடந்து வருகிறது. கரூரில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் நுாற்றுக்கணக்கான கண்ணாடி பாட்டில்கள், சாக்கு மூட்டையில் நிரப்பி குப்பை மேட்டில் துாக்கி வீசப்பட்டுள்ளது.மாநகராட்சி நிர்வாகம், அப்பகுதியில் குப்பை கொட்டக்கூடாது என அறிவிப்பு பலகை வைத்திருந்தும், அதை கண்டுகொள்ளாமல் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின், மருத்துவ கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய, அரசுப்பள்ளி மாணவர்களுக்கும், குடியிருப்பு மக்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக மருத்துவ கழிவுகளை அகற்ற, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.