புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்கள் இயக்கம்
கரூர், கரூர் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து, நேற்று முதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.கரூர் மாநகராட்சி திருமாநிலையூரை ஒட்டியுள்ள, கருப்பம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, 12.14 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில், 40 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது.நேற்று காலை 6:00 மணி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பஸ் ஸ்டாண்ட் வந்தது. அங்கிருந்து அனைத்து புறநகர் பஸ்களும் இயக்கப்பட்டன.இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மார்க்கத்திலிருந்து கரூர் வரும் பஸ்கள், வழக்கம்போல் பழைய பஸ் ஸ்டாண்ட், லைட் ஹவுஸ், திருமாநிலையூர் வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தது. மீண்டும் அதே வழித்தடத்தில் திரும்ப சென்றன.மதுரை, திண்டுக்கல், பழனி (வழி:அரவக்குறிச்சி) மார்க்கத்திலிருந்து வரும் பஸ்கள், சுக்காலியூர் ரவுண்டானாவிலிருந்து செல்லாண்டிபாளையம் வழியாக, புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்து, மீண்டும் அதே வழித்தடத்தில் திரும்ப சென்றன.திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் (வழி: குஜிலியம்பாறை) மார்க்கத்திலிருந்து கரூர் வரும் பஸ்கள் சுங்ககேட், திருமாநிலையூர் வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்து, மீண்டும் அதே வழியில் திரும்ப சென்றன.கரூர் பழைய பஸ் ஸ்டாண்டில், டவுன் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, புதிய பஸ் ஸ்டாண்டுக்கு டவுன் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.