உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தொழில் வரி, சொத்து வரி உயர்வை கண்டித்து ப.வேலுாரில் முழு கடையடைப்பு போராட்டம்

தொழில் வரி, சொத்து வரி உயர்வை கண்டித்து ப.வேலுாரில் முழு கடையடைப்பு போராட்டம்

ப.வேலுார், நவ. 30--ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், 2025-26ம் ஆண்டு முதல் அமல்படுத்தவுள்ள கடை உரிமை கட்டணம், தொழில் வரி, சொத்து வரி உயர்வை கண்டித்து, ப.வேலுார் நகர அனைத்து வர்த்தக சங்கம் சார்பில், நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. அனைத்து வகை வாடகை கட்டடங்கள், கடைகளுக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் சிறு, குறு வணிகர்கள் உட்பட அனைத்து வணிகர்களும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சேவை வரியை மத்திய அரசு கைவிட வேண்டும். மேலும், ப.வேலுார் டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில், 2025-26ம் ஆண்டு முதல் அமல்படுத்த உள்ள கடை உரிமை கட்டணம், தொழில்வரி, சொத்து வரி உயர்வை கைவிட வலியுறுத்தி, நேற்று ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு, வணிகர் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.அதன்படி, நேற்று காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரை, ப.வேலுார் நகரில் உள்ள ஹோட்டல், பேக்கரி, மளிகை, ஜவுளி, நகை, பாத்திர கடை மற்றும் போட்டோ ஸ்டுடியோ உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால், ப.வேலுார் பள்ளி சாலை, திருவள்ளுவர் சாலை, மோகனுார் சாலை, பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடி காணப்பட்டது. கடையடைப்பு போராட்டத்தால், ப.வேலுாரில் பல லட்சம் ரூபாய்க்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி