| ADDED : ஆக 03, 2011 01:21 AM
கரூர்: ''மேலப்பாளையம் பஞ்சாயத்து பகுதிக்கு காவிரியாற்றில் இருந்து தனியாக
குடிநீர் கொண்டு வரும் வகையில் முதல்வர் ஜெயலலிதா பார்வைக்கு கொண்டு
சென்று நடவடிக்கை எடுக்கப்படும்,'' என கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., காமராஜ்
தெரிவித்தார்.கரூரை அடுத்த மேலப்பாளையம் பஞ்சாயத்துக்கு அமராவதி ஆற்றில்
இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு சப்ளை செய்யப்பட்டது. கடந்த
1989 ம் ஆண்டு அக்ரஹாரம் குடிதெருவில் நீரேற்று நிலையமும் அமைக்கப்பட்டது.
ஆனால் கடந்த 10 ஆண்டாக அமராவதி ஆற்றில் கலக்கப்படும் சாயக்கழிவால், தண்ணீரை
விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.இதையடுத்து மேலப்பாளையம் உள்ளிட்ட 9 பஞ்சாயத்துகளுக்கு ஏமூர்
பகுதியில் உள்ள காவிரியாற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம்
தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தண்ணீர் சரிவர சப்ளை
இல்லாததால், அமராவதி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை கால்நடைகளுக்கு
குடிக்க பயன்படுகிறது. ஆனால் கால்நடைகள் இறந்து விடுவதாக கூறி, தனி காவிரி
குடிநீர் திட்டம் கேட்டு மேலப்பாளையம் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த
பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக
ஈடுப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.,
காமராஜ், டி.ஆர்.ஓ., பிச்சையா, குடிநீர் வடிக்கால் வாரிய அதிகாரிகள்
மேலப்பாளையம் பஞ்சாயத்தில் உள்ள நீரேற்றும் நிலையத்தை பார்வையிட்டனர்.
அங்கு சாயம் கலந்து கருமை நீறத்தில் உள்ள தண்ணீரை ஆய்வு
செய்தனர்.நிருபர்களிடம் எம்.எல்.ஏ., காமராஜ் கூறியதாவது:அமராவதி ஆற்றில்
எடுக்கப்படும் தண்ணீரில் உப்பு சதவீதம் அதிகமாக உள்ளதால், குடிநீர் மற்றும்
கால்நடைகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என பொதுமக்கள்
தெரிவித்தனர். தற்போது காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மேலப்பாளையம்
பஞ்சாயத்து நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்க ஏற்பாடு
செய்யப்படும். மேலும் மேலப்பாளையம் பஞ்சாயத்துக்கு, காவிரியாற்றில் இருந்து
தனி குடிநீர் திட்டம் செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு
கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.அப்போது
பஞ்சாயத்து தலைவர் மோகன்ராஜ், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் சிவதேவன் உள்பட
பலர் உடனிருந்தனர்.உவ்வே.. ஒரே உப்பு!மேலப்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம்
முன் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டியில் இருந்த தண்ணீரை டி.ஆர்.ஓ.,
பிச்சையா குடித்தார். ஆனால் உப்பின் அளவு அதிகமாக இருந்ததால், அவசர,
அவசரமாக துப்பிய டி.ஆர்.ஓ., பிச்சையா, 'கடல் நீரை விட இந்த தண்ணீரில் உப்பு
அதிகமாக உள்ளதே' என எம்.எல்.ஏ., காமராஜூடம் கூறினார். 'இந்த தண்ணீரைதான்
கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறோம்' என அந்த பகுதியை
சேர்ந்த பொதுமக்கள் டி.ஆர்.ஓ., பிச்சையாவிடம் தெரிவித்தனர்.