செல்லாண்டியம்மன் அணையில் வளர்ந்துள்ளசீமை கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
அரவக்குறிச்சி;அரவக்குறிச்சி அருகே, சாந்தப்பாடி செல்லாண்டியம்மன் அணையில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, சாந்தப்பாடி பகுதியில் செல்லாண்டியம்மன் அணை, 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த அணையில், ஆண்டுதோறும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி, சுற்று பகுதிகளில் உள்ள விவசாய கிணற்றில் நீர்மட்டம் உயர்ந்து, விவசாயிகளுக்கு பெரும் பயனளித்து வருகிறது. ஆனால், அணையை சுற்றி அதிகளவில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால், அங்கு நரி போன்ற வனவிலங்குகள் அதிகளவில் வருவதாக கூறப்படுகிறது. நரிகள், கருவேல மரங்களின் அடர்ந்த பகுதிகளில் தஞ்சமடைந்து, அருகிலுள்ள ஆடுகளை தாக்குவதால், விவசாயிகள் செம்மறியாடு வளர்ப்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், செல்லாண்டியம்மன் அணையை சுற்றியுள்ள சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்களும், விவசாயிகளும், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.