சாலையில் வெளியேறும் கழிவுநீர் சுகாதார சீர்கேட்டால் அவதி
கரூர்:கரூர், சி.எஸ்.ஐ., அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அருகே, வெளியேறும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதால், மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.கரூர், ஆசாத் சாலையில் சி.எஸ்.ஐ., அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, போலீஸ் ஸ்டேஷன், வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதி வழியாக, ஏராளமான வாகனங்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வரும் நிலையில், அடிக்கடி கழிவுநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் செல்வதாக பலமுறை அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், சி.எஸ்.ஐ., அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள, கழிவுநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. பள்ளி மாணவர்கள் அதனை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கடும் துர்நாற்றம் வீசுவதால், இப்பகுதியினர் அவதிப்படுகின்றனர். உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.