உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

ஓசூர் : ஓசூர் பத்தலப்பள்ளி மார்க்கெட் முன் சரக்கு லாரிகள் அணிவகுத்து நின்று காய்கறிகளை ஏற்றுவதால், பெங்களூரு - கிருஷ்ணகிரி சாலையில் போக்குவரத்து தினமும் பாதிக்கப்படுகிறது. ஓசூர் ஹட்கோ போலீஸ் ஸ்டேஷன் அருகே பத்தலப்பள்ளி மொத்த காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தினம் விளை நிலங்களில் விளையும் பல ஆயிரம் டன் காய்கறிகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து காய்கறிகளை வாங்கி லாரிகளில் கொண்டு செல்கின்றனர். இதன் மூலம் தினம் இங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் காய்கறிகள் வெளியிடங்களுக்கு ஏற்றுமதியாகிறது. பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட் பெங்களூரு-கிருஷ்ணகிரி நான்கு வழிச்சாலையையொட்டி அமைந்துள்ளது. அதனால், மார்க்கெட்டில் வாங்கும் காய்கறிகளை தொழிலாளர்கள் நான்குவழிச்சாலையோரம் சரக்கு லாரிகளை நிறுத்தி அவற்றை லோடு செய்கின்றனர். இதே போல் ஏராளமான லாரிகள் தினமும் காலை 12 மணிவரை சரக்குகளை ஏற்றி, இறக்குவதோடு அப்பகுதியிலே வாகனங்களை திருப்புவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி செல்லும் வாகன ஓட்டிகள் பத்தலப்பள்ளி மார்க்கெட் முன் தாராளமாக செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். மார்க்கெட்டில் இருந்து வெளியேறும் வாகனங்கள் நான்குவழிச்சாலையில் வாகனங்களை பார்த்து வெளியேறாமல் கண்மூடித்தனமாக வருவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. போக்குரவத்து போலீஸார், அதிகாரிகள் பத்தலப்பள்ளி மார்க்கெட் முன் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி